தேசிய தடகளப் போட்டியில், பெருந்துறை கொங்கு பள்ளி சிறப்பிடம் பிடித்துள்ளது.
தேசிய அளவிலான முதலாவது கேலோ இந்தியா தடகளப் போட்டிகள் தில்லி, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில், 17 வயதுக்கு உள்பட்ட மாணவிகள் பிரிவில் தமிழக அணி சார்பில், பெருந்துறை கொங்கு பள்ளி மாணவி எம்.கெளசல்யா 400 மீ தொடர் ஓட்டப் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றார்.
மேலும், இதே பிரிவில் போபாலில் நடைபெற்ற இந்திய பள்ளிக் கல்வி விளையாட்டுக் குழுமம் நடத்திய 63-ஆவது தேசிய தடகளப் போட்டியில் 100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கமும் வென்றார்.
மஹாராஷ்டிர மாநிலம், ரத்னகிரியில் இந்திய பள்ளி விளையாட்டுக் குழுமம் நடத்திய 63-ஆவது தேசிய அளவிலான தடகளப் போட்டியில், 29 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில், பெருந்துறை கொங்கு பள்ளி மாணவி யு.அரிஷ்மா கண்ணா, 14 வயதுக்கு உள்பட்ட மாணவிகள் பிரிவில் தமிழக அணி சார்பில் 100 மீ தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் டி.சரவணன் ஆகியோரையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.பாலமுரளி, பள்ளித் தலைவர் ஜி.யசோதரன், துணைத் தலைவர் எஸ்.குமாரசாமி, தாளாளர் டி.என்.சென்னியப்பன், பொருளாளர் பி.ஆர்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பாராட்டினர்.