ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் மார்ச் 11-இல் மாநில அளவிலான இளம் பேச்சாளர் மாநாடு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் வெளியிட்ட தகவல்:
மக்கள் சிந்தனைப் பேரவையின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளின் அடிப்படையில், தமிழக இளம் பேச்சாளர் மாநாட்டை ஈரோட்டில் மார்ச் 11-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் உள்ள கஸ்தூரிபா காந்தி கலையரங்கில் நடைபெறவுள்ளது.
அந்த மாநாட்டின் பிரதிநிதிகளாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஏற்கெனவே பேச்சுக் கலையில் அனுபவமுள்ள 30 வயதுக்கு உள்பட்ட ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்கின்றனர். மேலும், அம்மாநாட்டில் மறைந்த தமிழகத்தின் தலைசிறந்த சொற்பொழிவாளர்களின் திரு வுருவப் படங்களைத் திறந்து பெருமை சேர்ப்பதுடன், தற்போதுள்ள மிகச் சிறந்த மூத்த சொற்பொழிவாளர்களைப் பாராட்டி, கெளரவிப்பது போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
மேலும், மக்கள் சிந்தனைப் பேரவையின் 20-ஆம் ஆண்டு விழாவை பிப்ரவரி 16-ஆம் தேதியில் தொடங்கி ஓராண்டுக்கு மாநிலம் முழுவதும் பல வடிவங்களிலும் நடத்துவது. இவ்வமைப்பை மாநிலம் தழுவிய அமைப்பாக மேலும் விரிவாக்கம் செய்யும் நோக்கில் 32 மாவட்டங்களிலும் உருவாக்கும் நடவடிக்கைகள் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.