தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து, தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பற்ற 18 முதல் 35 வயதுடைய இளைஞர்களுக்காக இலவச குறுகிய கால தொழில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது.
5-ஆம் வகுப்பு தேறியவர்களுக்கு 3 மாத காலம் தையல் பயிற்சி, 8-ஆம் வகுப்பு தேறியவர்களுக்கு 5 மாத ஆட்டோமோட்டிவ் சர்வீஸ் பயிற்சி, 10-ஆம் வகுப்புத் தேறியவர்களுக்கு 3 மாத எலக்ட்ரீசியன் உதவியாளர் பயிற்சி ஆகியன வழங்கப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்புகள் மார்ச் 1-ஆம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது. இப்பயிற்சி பெறுபவர்களுக்கு இலவச பேருந்து வசதியுடன் நாளொன்றுக்கு ரூ. 100 வீதம் பயிற்சி காலம் முழுவதும் உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சியில் தேர்வு பெறும் பயிற்சியாளர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழ் எண் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளப்படும்.
பயிற்சியின் முடிவில் பொது, தனியார் நிறுவனங்களில் ரூ. 8,000 முதல் ரூ. 12,000 வரையிலான சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு பெற்றுத்
தர வழிவகை செய்யப்படும். பயிற்சி பெற்றவர்களின் பதிவு எண், விவரங்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரப் பூர்வமான இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளப்படும். மேலும், அரசு, பொது நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் இப்பயிற்சியாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.
பயிற்சி பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 24-ஆம் தேதி. விண்ணப்பங்களை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், பயிற்சி குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ள கல்லூரி முதல்வர், பயிற்சி ஒருங்கிணைப்பாளரை 04294 - 220471, 98427-84740, 86752-22955 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.