ஈரோடு கல்வி மாவட்ட அளவிலான உலகத் திறனாய்வுத் திறன் கண்டறியும் தடகள தேர்வுப் போட்டிகள் ஈரோடு, வ.உ.சி. பூங்கா விளையாட்டரங்கில் பிப்ரவரி 22-ஆம் தேதியும், கோபிசெட்டிபாளையம் கல்வி மாவட்ட அளவிலான உலகத் திறனாய்வுத் திறன் கண்டறியும் தடகள தேர்வுப் போட்டிகள் பிப்ரவரி 21, 22 ஆகிய நாள்களில் கோபிசெட்டிபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலகம் வெளியிட்ட தகவல்:
இத்தேர்வுப் போட்டியில் 6, 7, 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம். உலகத் திறனாய்வுத் திறன் கண்டறிதல் அறிக்கைகள் வழங்கிய பள்ளி மாணவ, மாணவிகள் மட்டும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.
போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளுக்குப் பயணப்படி, தினப்படி வழங்கப்படமாட்டாது.
இத்தேர்வுப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெறுபவர்களுக்குச் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்படும். மேலும், 2 இடங்களைப் பெறும் வீரர், வீராங்கனைகள் மண்டல அளவிலான போட்டிகளுக்கு அரசு செலவில் அனுப்பி வைக்கப்படுவர்.
போட்டிகளில் கலந்துகொள்ள வரும் மாணவ, மாணவிகள் கண்டிப்பாக பள்ளித் தலைமையாசிரியர், பள்ளி முதல்வர்களிடமிருந்து வயதுச் சான்றிதழ் பெற்று வர வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் ஐ.ஆர்.நோயிலின்ஜானை 74017-03490 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.