பெருந்துறை ஒன்றியம், நல்லாம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற மனு நீதி நாள் முகாமில் 59 பயனாளிகளுக்கு ரூ. 4.56 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தார்.
முகாமில், இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 24 பயனாளிகளுக்கு ரூ. 2,88,000-க்கான ஆணை, இந்திராகாந்தி தேசிய விதவை உதவித் தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ. 72,000-க்கான ஆணை, 6 நபர்களுக்கு வாரிசு சான்றிதழ்களும், 17 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணை, வேளாண்மைத் துறையின் சார்பில் 4 விவசாயப் பயனாளிகளுக்கு ரூ. 65,120 மதிப்பில் வேளாண் இடுபொருள்களும், தோட்டக் கலைத் துறை சார்பில் 2 விவசாயப் பயனாளிகளுக்கு ரூ. 31,840 என மொத்தம் 59 பயனாளிகளுக்கு ரூ. 4,56,960 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில், ஈரோடு கோட்டாட்சியர் ர.நர்மதாதேவி, துணை இயக்குநர் (பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்து துறை) மருத்துவர் பாலுசாமி, தனித் துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) எம்.பாபு, தாட்கோ பொது மேலாளர் ஐ.போஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.