சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கொத்தமங்கலம் தனியார் காகித ஆலைத் தொழிலாளி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்னாவில் ஈடுபட்டார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கொத்தமங்கலத்தில் தனியார் காகித ஆலை செயல்படுகிறது. இதில், 2006-ஆம் ஆண்டு முதல் 2015 -ஆம் ஆண்டு வரை பணியாற்றிய 11 தொழிலாளர்களுக்கும் தலா ரூ. 8 லட்சத்து 52 ஆயிரத்து 504 நிலுவைத் தொகையாக மொத்தம் ரூ. 94 லட்சம் வழங்குமாறு 11 தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய தொகையை உடனே செலுத்த வேண்டும். இல்லையெனில், ஆலையின் சொத்துகளில் பங்குதாரராகச் சேர்க்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை காகித ஆலை நிர்வாகம் செயல்படுத்ததாதால் தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டனர்.
இதையடுத்து, 2017-ஆம் ஆண்டு ஆலையை ஜப்தி செய்து தொழிலாளர்களுக்கு கொடுக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர், சார்பதிவாளர் அலுவலகத்தில் 11 தொழிலாளர்களின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 11 தொழிலாளர்களும் பட்டா மாறுதல் செய்து கொடுக்குமாறு வருவாய்த் துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், வழக்கு நிலுவையில் உள்ளதால் வருவாய்த் துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை தொழிலாளர் ஜேசுராஜ் என்பவர் வட்டாட்சியர் அலுவலகத்துக்குள் தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார். பின்னர், அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மனுவைப் பெற்றுக் கொண்டனர்.