கோபிசெட்டிபாளையம் மேட்டுவலசில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் நிறுவனத்தில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பனியன் துணிகள், இயந்திரங்கள் சேதமடைந்தன.
கோபி நகர் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தின் மேற்புறத்தில் புதன்கிழமை இரவு 11 மணியளவில் தீ எரிந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் கோபி காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த கோபி தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து, சத்தியமங்கலம், அந்தியூரிலிருந்தும் தீயணைப்பு வாகனங்கள், வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீசன் தலைமையிலான வீரர்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் தயாரிப்புக்காக வைக்கப்பட்டிருந்த பனியன் துணிகள், தையல் இயந்திரங்கள் தீயில் எரிந்தன. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்நிறுவனத்தை கோபி கோட்டாட்சியர் கோவிந்தராஜன், வட்டாட்சியர் பூபதி ஆகியோர் ஆய்வு செய்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து கோபி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.