கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழாவையொட்டி மூன்றாம் ஆண்டு மாநில கையுந்துப் பந்துப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இக்கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இளைஞர்களுக்கான விளையாட்டு மையம் சார்பில் பொங்கல் விழாவையொட்டி ஆண்டுதோறும் மாநில அளவிலான கையுந்துப் பந்துப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மாநில கையுந்துப் பந்துப் போட்டியை கல்லூரித் தாளாளர் ஏ.கே.இளங்கோ தொடக்கிவைத்தார்.
இதில், ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை, திண்டுக்கல், சேலம், மதுரை, சிவகங்கை, பாண்டிச்சேரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 70-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர். இப்போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ. 7,000, இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 5,000,
மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 3,000, நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 2,000 ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து அணிகளுக்கும் தலா 6 டி-சர்ட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவில் கொங்கு வேளாளர் தொழில்நுட்பக் கல்லூரி அறக்கட்டளை பாரம்பரியப் பாதுகாவலர் சச்சிதானந்தன், கொங்கு கலை, அறிவியல் கல்லூரித் தாளாளர் ஏ.கே.இளங்கோ, முதல்வர் ராமன் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வித் துறை இயக்குநர் சங்கர், உதவி உடற்கல்வித் துறை இயக்குநர் சு.வனிதா, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.