பெருந்துறையை அடுத்த வெள்ளோடு அருகே வேகமாக சென்ற பால் வேனின் டயர் வெடித்ததில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சென்னிமலை பகுதியில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த பாலை, ஈரோடு தனியார் பால் நிறுவனத்துக்குச் சொந்தமான மினி வேனில் வெள்ளோடு வழியாக ஈரோடு நோக்கி வெள்ளிக்கிழமை கொண்டு செல்லப்பட்டது. ஈரோட்டைச் சேர்ந்த ஓட்டுநர் தருமன் (40) அந்த வேனை ஓட்டினார்.
வெள்ளோடு, வி.மேட்டுப்பாளையம் அருகே சென்றபோது வேனின் பின் சக்கரம் தீடீர் என வெடித்தது. இதில், நிலை தடுமாறிய வேன் சாலையோரத்தில் இருந்த தோட்டத்தின் இரும்பு வேலியை உடைத்துக் கொண்டு சென்று, தென்னை மரத்தில் மோதி வேன் தலைகீழாக கவிழ்ந்தது.
இதில், வேனில் இருந்த 50 கேன் பாலும் கொட்டியது. வேனை ஓட்டிய தர்மன், உடன் சென்ற உதவியாளர் காயமின்றி உயிர்தப்பினர். இதுகுறித்து வெள்ளோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.