பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக சென்ற ஆண்டைப்போல சிறப்புப் பேருந்துகள் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை காலத்தில் வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு பேருந்தில் இடம் கிடைக்காமல் நின்றுகொண்டே பயணித்தல், கூட்ட நெரிசலில் பயணம் போன்ற சிரமங்களைக் குறைக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 10 முதல் 17-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
அதில், ஈரோடு மண்டலம் சார்பில் தினமும் 743 பேருந்துகள் இயங்கி வரும் நிலையில், சென்ற ஆண்டில் இதே நாள்களில் பொங்கல் பண்டிகையையொட்டி ஈரோடு மண்டலம், திருப்பூர் மண்டலம் சார்பில் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய ஊர்களிலிருந்து சென்னை, மதுரை, திருச்சி, பழனி, சேலம், தேனி, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்கு கூடுதலாக 89 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர் (மேற்கு), அடையாறு (காந்திநகர்), தாம்பரம் (சானிடோரியம்), பூவிருந்தவல்லி ஆகிய இடங்களில் தாற்காலிகப் பேருந்து நிலையம் அமைத்து தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஆனால், நடப்பு ஆண்டில் ஜனவரி 11-ஆம் தேதி இரவு வரை அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நீடித்ததால் சிறப்புப் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
எனினும், பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ஊர் திரும்ப வேண்டிய பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வரும் நாள்களில் அதாவது ஜனவரி 16, 17, 18 ஆகிய தேதிகளில் ஈரோடு மண்டலம் சார்பில் சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.