பெருந்துறை அருகே தீ விபத்தில் குடிசை எரிந்து சேதமானது.
பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில், விருப்பம்பதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (50). கூலித் தொழிலாளி. குடிசை வீட்டில் வசிக்கிறார். இவர், வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மேற்கூரையில் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று மாணிக்கத்தை எழுப்பி வெளியே அழைத்து வந்துள்ளனர்.
இதுகுறித்து, தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், வீட்டிலிருந்த அனைத்துப் பொருள்களும் எரிந்து சேதமடைந்தன. முன்னதாக, வீட்டில் இருந்த எரிவாயு உருளையை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து காஞ்சிக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.