சென்னிமலையில் தைப்பூசத் தேர்த் திருவிழா: 23 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்
சென்னிமலை, மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தைப்பூச தேர்த் திருவிழா 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நிகழாண்டு விழா 23 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி 15 நாள்கள் நடைபெறுகிறது. விழாவை ஒட்டி 24-ஆம் தேதி இரவு பல்லக்குச் சேவை, 25-ஆம் தேதி மயில்வாகனக் காட்சி, 27-ஆம் தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடு, வெள்ளிமயில் வாகனக் காட்சி நடக்கிறது.
28- ஆம் தேதி யானை வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் திருவீதி உலா, 29-ஆம் தேதி மாலை 6 மணிக்கு கைலயங்கிரி வாகனக் காட்சி, இரவில் காமதேனு வாகனக் காட்சியும் நடக்கிறது. 30 -ஆம் தேதி மாலை 6 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், 8 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்து குமாரசுவாமிக்கு திருக் கல்யாணமும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 31-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதை ஒட்டி அதிகாலை, 3 மணிக்கு மகா அபிஷேகமும், காலை, 7 மணிக்குள் தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
பிப்ரவரி 2 -ஆம் தேதி மாலை 5 மணிக்கு தேர் நிலை வந்தடைகிறது. இரவில் பரிவேட்டை, குதிரை வாகனக் காட்சி, தெப்போற்சவம், பூதவாகனக் காட்சி நடக்கிறது.
பிப்ரவரி 3 -ஆம் தேதி காலையில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக் குமாரசுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. அன்று இரவு சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்திலும் திருவீதி உலா வருதல் அதிகாலை வரை நடைபெறுகிறது.
அன்று, சென்னிமலையில் முருகனைத் தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். பிப்ரவரி 5-ஆம் தேதி மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், 15 நாள் விழா நிறைவடைகிறது.