குரங்கன் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஆய்வு செய்த பிறகு வாய்க்காலில் லைனிங் மட்டும் அமைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மொடக்குறிச்சி வட்டாரத்துக்கு உள்பட்ட குரங்கன் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் கடந்த திங்கள்கிழமை விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். அதில், மொடக்குறிச்சி வட்டாரத்துக்கு உள்பட்ட எழுமாத்தூர், மொடக்குறிச்சி, ஈஞ்சம்பள்ளி, புஞ்சைக்காளமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். பாசன வசதி இல்லாத பகுதிக்கு நிலத்தடி நீராதாரமாக விளங்குவது குரங்கன் கால்வாய் ஆகும்.
இந்த கால்வாயில் 10 நாள்களுக்கு தண்ணீர் சென்றால் சுமார் 4 மாதங்களுக்கு குடிநீர் பஞ்சமே ஏற்படாது. தற்சமயம் இந்த கால்வாயில் கான்கிரீட் தளம் அமைத்தால் இப்பகுதி கிராமத்தின் நிலத்தடி நீர் ஆதாரம் மிகவும் பாதிக்கும். விவசாயிகளின் நலன் கருதி கான்கிரீட் தளம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தியிருந்தனர்.
இதையடுத்து, அப்பகுதியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதி அளித்தார். இந்நிலையில், விவசாயிகளின் ஆலோசனைப்படி குரங்கன் வாய்க்காலில் லைனிங் மட்டும் அமைக்கவும், தரைத்தளத்தை அகலப்படுத்தி கான்கிரீட் தளம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், குரங்கன் வாய்க்காலில் லைனிங் பணி அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.