சத்தியமங்கலம் அருகே குடிநீர் வழங்கக் கோரி எரங்காட்டுப்பாளையம் கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள எரங்காட்டுப்பாளைம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். நல்லூர் ஊராட்சியை சேர்ந்த இப்பகுதி மக்களுக்கு பவானிசாகரில் செயல்படும் தொட்டம்பாளையம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலமாகக் குடிநீர் விநியோகிக்கப்படுகி றது.
இப்பகுதி மக்கள் கடந்த சில நாள்களாக தங்களுக்குத் தேவையான குடிநீர் கிடைப்பது இல்லை என புகார் தெரிவித்தனர். இந்நிலையில், அவர்கள் காலிக்குடங்களுடன் புன்செய் புளியம்பட்டி - நம்பியூர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சத்தி வட்டாட்சியர் கிருஷ்ணன், ஒன்றிய ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரில் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, பொது மக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.