கோவையில் நகை வியாபாரியின் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
கோவை, செல்வபுரத்தில் வசித்து வருபவர் விமல். இவர் தங்கக் கட்டிகளை, நகைகளை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். அவரது அலுவலகம் கோவை, பெரியகடை வீதியில் உள்ளது. இந்த நிலையில், விமலின் அலுவலகம், வீடு ஆகியவற்றில் வருமான வரித் துறை அதிகாரிகள் 8 பேர் இரு குழுக்களாகப் பிரிந்து புதன்கிழமை காலை 6 மணி முதல் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அலுவலகத்தில் இருந்த விமலிடமும் விசாரணை நடத்தினர்.
2016-ஆம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது வங்கிக் கணக்கில் அதிக அளவில் பரிவர்த்தனை செய்ததன் அடிப்படையில் இந்த சோதனைநடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சோதனையில் அவர் ஒரு சில ஆவணங்களைத் தனியார் நிதி நிறுவனத்தில் வைத்துள்ளதாகத் தெரியவந்தது.
இதையடுத்து ரயில் நிலையம், கிராஸ்கட் சாலையில் செயல்பட்டு வரும் அந்த நிதி நிறுவன கிளை அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், எந்தெந்த காலக்கட்டங்களில் பணபரிவர்த்தனை நடைபெற்றது என்பது குறித்த விவரங்களையும் சேகரித்தனர்.