அந்தியூர் அருகே மர்மக் காய்ச்சல் பாதிப்பால் 9 மாதமே ஆன பெண் குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.
அந்தியூரை அடுத்த ஒலகடம், கொளந்தபாளையத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து - தமிழரசி தம்பதி. இவர்களின் இரண்டாவது மகள் நைனிகா, பிறந்து 9 மாதங்களே ஆகின்றன. கடந்த 3 நாள்களாக சளி, காய்ச்சல் பாதிப்பு இருந்ததால் அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நைனிகாவுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆயினும், காய்ச்சல் குணமாகவில்லை. இந்நிலையில், வீட்டிலிருந்த நைனிகாவுக்கு திடீரென ஞாயிற்றுக்கிழமை உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றபோது, சிகிச்சை பலனின்றி நைனிகா உயிரிழந்தது.
இவர்களின் மூத்த மகள் இந்துமதிக்கும் (3) காய்ச்சல் பாதிப்பு உள்ளதால், ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மர்மக்காய்ச்சல் பாதிப்பால் 9 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்தியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.