ஈரோடு கனரா வங்கியின் கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் மூலம் கிராமப்புற இளைஞர், இளம்பெண்களுக்கு ஆடு வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்த 10 நாள் இலவச பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பயிற்சி நிலைய இயக்குநர், கனரா வங்கி முதுநிலை மேலாளர் கே.சுதர்சன் வெளியிட்ட தகவல்:
கிராமப்புறத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இருபால் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து, அவர்கள் சுயதொழில் செய்து வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் இலவச மதிய உணவு, தரமான குறிப்பேடுகளுடன் பல்வேறு தொழில் பயிற்சிகளை அளித்து அவர்களது எதிர்காலத்துக்கு வழிகாட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது கால்நடைகளில் நல்ல வருவாயை ஈட்டித்தரக் கூடிய ஆடுகளை நவீன தொழில் நுட்பத்தில் வளர்க்கக் கூடிய தொழில்நுட்பங்கள் குறித்து அக்டோபர் 22 முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரை 10 நாள்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதில், சேர விரும்புவோர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. ஞாயிறு தவிர தினமும் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், மகளிர் குழுவினர் கிராமப்புற இளைஞர்கள் அக்டோபர் 21 ஆம் தேதிக்குள் நேரில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். வறுமைக் கோட்டுக்குகீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் நிலைய இயக்குநர், கனரா வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி வளாகம், இரண்டாம் தளம், ஈரோடு, கரூர் பைபாஸ் சாலை, கொல்லம்பாளையம் பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தம், ஈரோடு எனும் முகவரியை அணுகலாம். மேலும், விவரங்களுக்கு 0424-2400338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.