வீணாகக் கடலுக்குச் சென்று கலக்கும் நீரை ஏரி, குளங்களில் நிரப்ப வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
மழைக் காலங்களில் காவிரி, பவானி ஆறுகளில் ஏற்படும் வெள்ளப் பெருக்கின் காரணமாக கடலில் வீணாக கலக்கும் உபரி நீரை தடுப்பணைகள் மூலம் தடுத்து நிலத்தடி நீராதராத்தை அதிகரிக்கும் வகையில் ஏரி, குளம், குட்டைகளில் நிரப்பி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாண்டியாறு - புன்னம்புழா திட்டம், மேட்டூர் உபரி நீர் திட்டம், அவிநாசி -அத்திக்கடவு திட்டம், மணியாச்சி - வழுக்குப்பாறை திட்டம், டி.என்.பாளையம் - வேதபாறை தடுப்பணை திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். கடலிலில் வீணாகும் தண்ணீரை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளம், குட்டைகளில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் மாநில இளைஞரணிச் செயலாளர் எஸ்.சூரியமூர்த்தி, மாநில தொழிற்சங்கத் தலைவர் எஸ்.ஜெகநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் பிரபாகரன், சிவராஜ், துரைராஜ், சாமிநாதன், முத்துசாமி, அவைத் தலைவர் சென்னியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.