ஈரோடு அருகே உள்ள தனியார் கிடங்கில் நேரிட்ட தீ விபத்தின் காரணமாக கரும்புகை பரவியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
ஈரோடு, வெண்டிபாளையம், கோணவாய்க்கால் பகுதியில் சண்முகம் என்பவருக்குச் சொந்தமான பழைய எண்ணெயை மறுசுழற்சி செய்யும் ஆலை செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலையின் கிடங்கில் பழைய ஆயில் பேரல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் ஆயில் கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஈரோடு தீயணைப்புத் துறையினர், 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட ஆயில் பேரல்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. விபத்தால் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு கரும்புகை பரவியதால் அப்பகுதி மக்கள் மூச்சுவிட சிரமப்பட்டனர்.