மொடக்குறிச்சியை அடுத்த காங்கயம்பாளையத்தில் சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி, பொதுமக்களிடையே பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும் விதம் குறித்த முகாம் நடைபெற்றது.
மொடக்குறிச்சியை அடுத்த நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சி, காங்கயம்பாளையம் அரசு துவக்கப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இம்முகாமிற்கு, ஈரோடு கோட்டாட்சியர் முருகேசன் தலைமை வகித்து, பேரிடர் காலங்களில் பொதுமக்கள் செயல்படும் விதம் குறித்து விளக்கிப் பேசினார். மொடக்குறிச்சி வட்டாட்சியர் அஷ்ரபுன்னிசா, வட்டார வளர்ச்சி அலுவலர் மாரிமுத்து, மண்டல துணை வட்டாட்சியர் சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீயணைப்புத் துறை வீரர்கள் ஆபத்துக் காலங்களில் மயக்கமடைந்தவர்கள், தீயில் சிக்கியவர்கள், கை, காலில் அடிபட்டவர்களை மீட்கும் விதம் குறித்து செயல்விளக்கம் அளித்தனர். இதில், மொடக்குறிச்சி தாலுகாவுக்கு உள்பட்ட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.