காவலர் வீரவணக்க நாளையொட்டி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்திலுள்ள காவலர் நினைவு சதுக்கத்தில் மாவட்டக் காவல் துறை சார்பில் மலர் வளையம் வைத்து ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்திய எல்லையான லடாக் பகுதியில் ஹாட்ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் 1959 ஆம் ஆண்டு நடத்திய திடீர்த் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படை போலீஸார் 10 பேர் உயிரிழந்தனர்.
வீரமரணம் அடைந்த இந்தக் காவலர்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையிலும், ஆண்டுதோறும் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் காவலர் வீர வணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் காவல் துறையில் கடமையாற்றும்போது கடந்த 71 ஆண்டுகளில் தமிழகத்தில் உயிர்நீத்த 146 காவலர்கள் உள்பட நாடு முழுவதும் உயிர் நீத்த காவலர்களுக்கு காவல் துறையினர் அஞ்சலி செலுத்தினர்.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவு சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் பங்கேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதில், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், திவ்யா, சரஸ்வதி, ஆயுதப் படைப் பிரிவு சேகர், போக்குவரத்துப் பிரிவு எட்டியப்பன், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.