புதிதாக தேர்வு பெற்றுள்ள கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் செயல்பட வேண்டும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.
அந்தியூரில் புதிதாக தேர்வு பெற்றுள்ள கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா சட்டப் பேரவை உறுப்பினர் ஈஎம்ஆர்.ராஜா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் என்.கிருஷ்ணராஜ், அம்மாபேட்டை ஒன்றிய அதிமுக செயலர் வி.ஏ.சரவணபவா, முன்னாள் ஒன்றியச் செயலர் இ.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பங்கேற்ற சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது:
புதிதாக தேர்வான கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, சங்கத்தை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும். சங்கத்தின் தேவைகள் குறித்துத் தெரிவித்தால் அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை
எடுக்கப்படும். தமிழக அரசு மீது திமுக தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறது. ஆனால், ஊழலை அறிமுகப்படுத்தியதே திமுகதான்.
தமிழகத்தில் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இதில், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் டி.எஸ்.மீனாட்சி சுந்தரம், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் எஸ்.பி.ரமேஷ், குருராஜ், அத்தாணி ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.