அனைத்து மருத்துவமனைகளையும் பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டத்தின்கீழ், அனைத்து மருத்துவமனைகளையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் பொது சுகாதாரத் துறையின் அறிவிக்கையின்படி, ஈரோடு மாவட்டத்தில் ஆங்கில மருத்துவ முறையில் உள்ள அனைத்து தனியார், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பல் மருத்துவ மையம், பல் மருத்துவமனை, உடல் குழாய் உள்நோக்கல் (எண்டோஸ்கோப்பி) மருத்துவ நிலையம், மருத்துவ ஆய்வகங்கள், எக்ஸ்ரே-கதிர், மீயொலி வரைவி (அல்ட்ராசோனோகிராம்), இதய மின்னலை வரைவி (இசிஜி), மூளை மின்னலை வரைவி (இஇஜி), சிடி ஸ்கேன், மிதிசெக்குருளை (டிரெட் மில்), மின் ஒலி இதய வரைவி (எக்கோ கார்டியோகிராபி), கான்டிராஸ்ட் ஆய்வுகள், எம்ஆர்ஐ, அனைத்து கிளினிக்குகளும், மேலும் இந்திய மருத்துவ முறை, ஹோமியோபதி மருத்துவ முறைகளான ஆயுஷ் மையம், சித்தா, யுனானி, ஆயுர்வேதம், யோகா, இயற்கை
மருத்துவ முறைகளான யோகா மருத்துவ முறை, நீர் சிகிச்சை மருத்துவ முறை, சேற்று மண் சிகிச்சை, காந்த சிகிச்சை, தொக்கண சிகிச்சை, நிற வண்ண சிகிச்சை, மின்னியல் சிகிச்சை, அக்கு பஞ்சர், அக்கு பிரஷர், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏனையதொரு மருத்துவ முறைகளையும் "தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டம் - 1997 (ம) விதி 2018' (Tamil Nadu Clinical Establishment) (Regulations) Act} 1997 and Rules 2018) இன் படி பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தை (Form-1) TamilNadu Clinical Establishment.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, The Joint Director of Medical and Rural Health Services, Payable at Erode என்ற பெயரில் ரூ. 5 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையுடன், தீயணைப்புச் சான்றிதழ் நகல், மாசுக் கட்டுப்பாட்டு நிறுவனச் சான்றிதழ் நகல், பயோ-மெடிக்கல் வேஸ்ட் சான்றிதழ் நகல், கட்டட ஸ்திரத்தன்மை சான்று நகல், கட்டட அனுமதிச் சான்று நகல், மருத்துவர், செவிலியர், செவிலிய உதவியாளர், மருந்தாளுநர் ஆகியவற்றை ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள இணை இயக்குநர் நலப் பணிகள் அலுவலக முகவரிக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி
மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.