ஜம்பை பேரூராட்சியில் குடிநீர்க் கட்டணம், வீட்டு வரி உள்ளிட்ட பொதுமக்களைப் பெரிதும் பாதிக்கும் வரியினங்களின் உயர்வைக் கைவிட வேண்டும் என பொதுமக்கள், அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, ஜம்பை பேரூராட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் பொருப்பாளர் தங்கவேல் தலைமையில் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்ட மனு:
ஜம்பை பேரூராட்சிப் பகுதியில் வீடுகளுக்கு மாதாந்திர குடிநீர்க் கட்டணம் ரூ. 55 லிருந்து ரூ. 150 ஆகவும், புதிய இணைப்புக்கான வைப்புத் தொகை ரூ. 3000 லிருந்து ரூ. 6000 என உயர்த்தப்பட்டுள்ளது. வணிகம், தொழிற்சாலை பயன்பாட்டுக்கான கட்டணங்களும் கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வரி இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. குப்பைகள் சேகரிக்கவும் வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜம்பை பேரூராட்சிப் பகுதியில் அதிக அளவில் விவசாயக் கூலி, நெசவுத் தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது வரியினங்களின் உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இவ்வகையிலான வரியினங்களின் உயர்வை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அனைத்துக் கட்சி நிர்வாகிகள் டி.ரவீந்திரன் (சிபிஎம்), சுந்தரராஜன் (சிபிஐ), செளந்திரராஜ் (திமுக), விஜயேந்திரன் (தேமுதிக), ஆற்றலரசு (விடுதலைச் சிறுத்தைகள்), செம்பன் (தமிழ் புலிகள் கட்சி), தர்மலிங்கம் (ஆதித்தமிழர் பேரவை), வேணுகோபால் (தந்தை பெரியார் தி.க.) ஜாகிர் உசேன் (எஸ்.டி.பி.ஐ), அனைத்து வணிகர் சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் உடன் சென்றிருந்தனர்.