ஆதிவாசி கிராமங்களில் தற்போதைய காலநிலைக்கு ஏற்ப மருத்துவ குணமிக்க மரப்பாசி மரங்களில் படர்ந்து காணப்படுவதால் அவற்றைச் சேகரிக்கும் பணியில் நீலகிரி ஆதிவாசி மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது லேசான மழையும், மிதமான வெப்பமும், இரவு நேரத்தில் குளிரும் நிலவுகிறது. இங்குள்ள ஆதிவாசி கிராமங்களான சேம்புக்கரை, செம்மணாரை, செங்கல் புதூர், ஆணைப்பள்ளம், குரும்பாடி போன்ற பகுதிகளைச் சேர்ந்த ஆதிவாசி மக்கள் அவர்களது கிராமங்களைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் உள்ள மரங்களில் மருத்துவ குணமிக்க மரப்பாசி படரத் தொடங்கியுள்ளது.
இந்த மரப்பாசியை அரைத்து உண்பதன் மூலமாக உடலில் உள்ள கொழுப்புச் சத்து குறையும் என்பதாலும், முகத்தில் தோன்றும் பருக்கள் மற்றும் கறை மறையும் என்பதாலும் இவற்றை மரத்தில் இருந்து சேகரிக்கும் பணியில் ஆதிவாசி மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மரப்பாசிளை நாட்டு மருந்துக் கடைகளில் விற்பதன் மூலமாக கணிசமான தொகையை அவர்கள் பெறுகின்றனர்.
நாட்டு மருந்துக் கடைகளில் மரப்பாசி 10 கிராம் ரூ. 20 வரை விற்கப்படுவதால் மிகக் குறைந்த விலையில் உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்க முடியும் என்பதால் இவை அதிக அளவில் விற்பனையாவதாக நாட்டு மருந்து விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.