காவல் துறையில் தொழில்நுட்பப் பிரிவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.4 லட்சம் மோசடி செய்ததாக ஓய்வுபெற்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோத்தகிரி, கல்லட்டி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் (54). இவர், கோவையில் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வுபெற்றவர். அவர், உதகை புதுமந்துப் பகுதியைச் சேர்ந்த ராஜாமணியிடம், காவல் துறையில் தொழில்நுட்பப் பிரிவில் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், தகுதியானவர்கள் யாராவது இருந்தால் தன்னால் வேலை வாங்கித் தர முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.
அப்போது, ராஜாமணி தனது மகனுக்கே இந்த வேலையை வாங்கித் தருமாறும், இதற்காக ரூ.4.15 லட்சம் கொடுப்பதாகவும் தெரிவித்து,அத்தொகையையும் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பணியிடம் தொடர்பாக ராஜாமணிக்கு தகவல் ஏதும் வராததால் சந்தேகமடைந்த அவர், கோத்தகிரி காவல் நிலையத்தில் நடராஜ் மீது புகார் கொடுத்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், தனிப்படை அமைத்து, கோவை மாவட்டம், நரசிமம்மநாயக்கன்பாளையத்தில் நடராஜை கைது செய்தனர்.
கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடராஜ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம், நீலகிரி, கோவை மாவட்ட காவல் துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.