கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மர்மக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
கூடலூர் அரசு மருத்துவமனை, நகர மருந்தகத்தில், காய்ச்சல் காரணமாக பொது மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. மேலும், தனியார் மருத்துவமனைகளிலும் ஏராளமானோர் கிசிச்சை பெற்று வருகின்றனர்.
இப்பகுதிகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரில் பலரும், அண்டை மாநிலமான கேரளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லையில் கூடலூர் அமைந்துள்ளதால், இப்பகுதி மக்கள் தங்கள் தேவைக்காக கேரளம் சென்று வருகின்றனர். நாடுகாணி, தேவாலா, பந்தலூர் போன்ற பல பகுதியிலிருந்தும் பொது மக்கள் வேலை நிமித்தமாக கேரளத்துக்குச் சென்று வருகின்றனர். கேரளத்தில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் நிலையில், கூடலூர் பகுதியிலும் டெங்கு காய்ச்சல் பீதி நிலவுகிறது.
கூடலூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது. அவசரச் சிகிச்சைப் பிரிவில், 24 மணி நேரமும் வரும் நோயாளிகளைப் பரிசோதித்து மருந்துகள் வழங்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.