தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் மிதமாகவும், சில இடங்களில் தூறல் மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக நீலகிரியில் பருவமழைக் காலம் முடிவுக்கு வந்துவிடவில்லை என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் தென்மேற்குப் பருவமழை சுமார் 40 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளதாக மண், நீர்வளஆராய்ச்சி மையத்தினர் தெரிவித்திருந்தாலும், எதிர்வரும் வடகிழக்குப் பருவமழை இக்குறைபாட்டை சமன் செய்து விடுமெனவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக கொடநாட்டில் 62 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கூடலூரில் 11 மி.மீ., குன்னூரில் 10 மி.மீ., குந்தாவில் 7 மி.மீ., அப்பர்பவானியில் 5 மி.மீ., கிளன்மார்கனில் 2 மி.மீ., எமரால்டில் 1 மி.மீ., என மழை பதிவாகியுள்ளது. உதகையில் மழை அளவு பதிவாகாவிட்டாலும் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக தொடர்ந்து தூறல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரில் கடும் குளிரும் நிலவுகிறது.