மஞ்சூர் அருகே உள்ள தாய்சோலையில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டப் பகுதியில் புதன்கிழமை சிறுத்தை நடமாடியதால் தோட்டத் தொழிலாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
மஞ்சூர் அருகே, தாய்சோலை பகுதியில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று புதன்கிழமை புகுந்தது.
அதைக் கண்ட தோட்டத் தொழிலாளர்கள் அலறி அடித்து கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பகல் நேரத்தில் தேயிலை தோட்டத்துக்குள் சிறுத்தை நுழைந்தது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள், சிறுத்தையை வனப் பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் சிறுத்தை அதே பகுதியில் அரை மணி நேரம் இருந்துள்ளது.
பின்னர், அதுவாகவே வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது. பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டத்துக்குள் உலா வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.