நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருள்களைப் பயன்படுத்தினால் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படுமென ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பாலதீன் பொருள்களின் உபயோகத்தை தவிர்க்கும்பொருட்டு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பர்லியாறு பகுதியில் இயங்கிவரும் கியாஸ்க் மையத்தைப் போன்றே மாவட்டத்திலுள்ள இதர சோதனைச் சாவடிகளான குஞ்சப்பனை, நாடுகாணி, தாளூர், சோலாடி, நம்பியார்குன்னு, பாட்டவயல், கக்கநள்ளா ஆகியவற்றில் கியாஸ்க் மையங்கள் ஆகஸ்ட் 11-ஆம் தேதியிலிருந்து இயங்கவுள்ளது.
இந்தச் சோதனைச்சாவடிகளில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு அவற்றில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருள்கள் இருப்பின் அவற்றைப் பறிமுதல் செய்வதுடன், அபராதத் தொகையாக ரூ. 1,000 விதிக்கப்படும். வனப் பகுதிகளில் எளிதில் தீப்பற்றுவதைத் தவிர்க்கும் பொருட்டு சுற்றுலாப் பயணிகள் எரிவாயு உருளைகள், எளிதில் தீப்பற்றும் பொருள்களைக் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.