உதகையில் சர்வதேச பூர்வீக குடிகள் தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
உதகையிலுள்ள பழங்குடியினர் கலாசார மையத்தில் இந்திய மானுடவியல் ஆய்வுத் துறையின் தென்னிந்திய மையம், தமிழக வனத் துறையின் சூழல் மேம்பாட்டுக் குழு, நீலகிரி பண்டைய பழங்குடியினர் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், நீலகிரி மாவட்டத்திலுள்ள 6 பண்டைய பழங்குடியினரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜ்குமார் பேசுகையில், பழங்குடியினருக்கு வனப் பகுதிகளில் பொருள்களைச் சேகரிக்கும் முழுஉரிமை உள்ளது. வனச் சட்டங்கள், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்கள் ஆகியவற்றை பழங்குடியினர் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் சீனிவாச ரெட்டி, கோவை மண்டல வனப் பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், நீலகிரி தெற்கு வனக் கோட்ட அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.