நீலகிரி மாவட்டத்தில் ரசாயனத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளைக் கரைக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விநாயகர் சதுர்த்தியின்போது, களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். ரசாயன வண்ணப் பூச்சுகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது.
இதனால், நீரின் உப்புத்தன்மை அதிகரித்து அதைப் பயன்படுத்தும் பொதுமக்கள், கால்நடைகளுக்கு நோய்கள் வர வாய்ப்புள்ளது. ரசாயனத்தால் செய்யப்பட்ட சிலைகள் கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும். நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் 28 -ஆம் தேதி வரை சுமார் 450 விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதில், உதகையில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் வைக்கப்படும் 47 சிலைகள் காமராஜர் சாகர் நீர்த்தேக்கத்தில் 26-ஆம் தேதி மாலை கரைக்கப்படும். இந்து முன்னணியின் சார்பில் வைக்கப்படும் 41 சிலைகள் காமராஜர் சாகர் நீர்த்தேக்கத்தில் 27-ஆம் தேதி மாலை கரைக்கப்படும். கேத்தியில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் வைக்கப்படும் 6 சிலைகள் காமராஜர் சாகர் நீர்த்தேக்கத்தில் 27-ஆம் தேதி மாலை கரைக்கப்படும்.
குன்னூரில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்படும் 59 சிலைகள் லாஸ் பால்ஸ் நீர்வீழ்ச்சியில் 27-ஆம் தேதியிலும், கொலக்கம்பையில் பொதுமக்கள் சார்பில் வைக்கப்படும் 3 சிலைகள் ஆஞ்சநேயர் பாலத்திலும், கோத்தகிரியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்படும் 80 சிலைகள் உயிலட்டி நீர்வீழ்ச்சியிலும், கூடலூரில் கோயில் கமிட்டி சார்பில் வைக்கப்படும் 96 சிலைகள் இரும்புப் பாலம் பகுதியிலும், நடுவட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் வைக்கப்படும் 11 சிலைகள் டி.ஆர்.பஜார் பகுதியிலும், மசினகுடியில் பொதுமக்கள் சார்பில் வைக்கப்படும் 3 சிலைகள் சீகூர் ஆறு, மரவக்கண்டி அணையிலும், தேவாலாவில் விஸ்வ இந்து பரிஷத், இந்து முன்னணி சார்பில் வைக்கப்படும் 81 சிலைகள் பொன்னானி ஆற்றில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி கரைக்கப்படும்.
கோத்தகிரியில் அனுமன் சேனை சார்பில் வைக்கப்படும் 27 சிலைகள் உயிலட்டி நீர்வீழ்ச்சியில் 28-ஆம் தேதி கரைக்க அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.