உதகையை அடுத்த மசினகுடி அருகே உள்ள வாழைத் தோட்டம் பகுதியில் ஆவின் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
மசினகுடி அருகே உள்ள வாழைத் தோட்டம் பகுதியில் ஆவின் நிர்வாகத்துக்குச் சொந்தமான 17 ஏக்கர் நிலம் உள்ளது. கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்குத் தீவனம் சாகுபடி செய்வதற்கு இந்த நிலம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆவின் நிர்வாகத்தில் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்ற பின்னர், இந்நிலத்தை தனியார் பயன்பாட்டுக்கு குத்தகைக்கு விடப்பட்டு வந்தது. இதில், ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக அண்மைக்காலமாக இந்த நிலம் எவ்வித பயன்பாட்டுக்கும் இல்லாமல் காலி நிலமாகவே விடப்பட்டிருந்தது.
இந்நிலையில், மசினகுடி, வாழைத்தோட்டம் பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்கள் அந்த காலி இடத்தில் குடிசைகளை அமைத்தனர்.
இதுதொடர்பாக அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஆவின் நிர்வாகம், வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் அங்கிருந்து வெளியேற்ற மறுத்துவிட்டனர்.
இதுதொடர்பாக மசினகுடி பகுதியைச் சேர்ந்த காளன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.
அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையின்பேரில் ஆவின் நிலத்தில் இருந்து ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றும் பணிகள் நடைபெற்றன. ஆனால், அதற்கு அங்கிருந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பாஸ்கரன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் கூடலூர் துணை கண்காணிப்பாளர் ரவிசந்திரன், கோட்டாட்சியர் கீதாபிரியா, உதகை வட்டாட்சியர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புடன் 85 குடிசைகள் அகற்றப்பட்டன.
ஆட்சியரிடம் மனு:
வாழைத் தோட்டம் பகுதியிலிருந்த மக்கள் தங்களுக்கு குடியிருக்க மாற்று இடம் இல்லாததால் அந்த இடத்தையே வழங்க வேண்டுமென வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் இதுதொடர்பாக அரசுக்குத் தகவல் அனுப்புவதாக தெரிவித்ததையடுத்து அவர்கள் சென்றனர்.