கோத்தகிரியில் காவல் துறையினரின் நடவடிக்கையைக் கண்டித்து வாடகை வாகன ஓட்டுநர்கள் குன்னூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
கோத்தகிரி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபடும் போலீஸார் ஓட்டுநர்களைத் தகாத வார்த்தையில் பேசுவதாகவும், அதிக பாரம், அதிவேகமாக வருவதாகவும் கூறி அபராதம் விதிப்பதாக வாடகை வாகன ஓட்டுநர்கள் கோத்தகிரியில் வியாழக்கிழமை கண்டனப் பேரணிக்கு அனுமதி கேட்டிருந்தனர்.
அனுமதி கிடைக்காததால் 100- க்கும் மேற்பட்ட வாகனங்களில் குன்னூருக்கு ஊர்வலமாக வந்த ஓட்டுநர்கள் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, ஓட்டுநர்களிடம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அ. முத்தமிழ் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், இதுகுறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஓட்டுநர்கள் கலைந்து சென்றனர்.