உதகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க புதிய திட்டம்

உதகையில், சுற்றுலா மையங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

உதகையில், சுற்றுலா மையங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
   நீலகிரி மாவட்டத்தை,  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் இல்லாத மாவட்டமாக அறிவித்த பின்னர், அதன் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில்  பொதுமக்கள்,  சுற்றுலாப் பயணிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  
 இதில், உதகை அரசினர் தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க  2 மகளிர் சுய  
உதவிக் குழுவினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதன்படி,  12 பேர் அடங்கிய மகளிர் சுய உதவிக் குழுவினர் தாவரவியல் பூங்காவிலும்,  12 பேர் அடங்கிய மற்றொரு மகளிர் குழு படகு இல்லத்திலும் செயலாற்றும்.
   இக்குழுவினர், சுற்றுலாப் பயணிகள் கொண்டுவரும் தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட  அனைத்து பிளாஸ்டிக் பொருள்களின் மீதும் ரூ.10 மதிப்பிலான ஸ்டிக்கர்களை ஒட்டி, பணத்தைப் பெற்றுக்கொள்வார்கள். சுற்றுலாப் பயணிகள், அங்கிருந்து வெளியேறும்போது,  இந்த ஸ்டிக்கர்களைக் கொடுத்து பணத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
  சுற்றுலாப் பயணிகள்,   பிளாஸ்டிக் பொருள்களை அந்த இடங்களிலேயே வீசியெறிந்துவிட்டால்,  அந்தப் பணம் சுய உதவிக் குழுவினரின் கணக்கிற்குச் சென்றுவிடும். இப்புதிய திட்டத்தை உதகை படகு இல்லத்தில் மாவட்ட  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிமுகப்படுத்தி, அதற்கான பணியாணைகளை மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com