உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும், நீலகிரி மாவட்டத்துக்கான நிர்வாக பொறுப்பு நீதிபதியுமான டிகிருஷ்ணமூர்த்தி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள ஆவணங்கள், கோப்புகளை சரிபார்க்கும் ஆய்வை சனிக்கிழமை மேற்கொண்டபோது, வழக்குரைஞர்கள், நீதிமன்ற பணியாளர்களின் குறைகளை அவர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, நீலகிரி மாவட்ட நீதிபதி வடமலை, மகளிர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன், சார்பு நீதிபதி புகழேந்தி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலர் சுரேஷ்குமார், உதகை நீதித்துறை நடுவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றதனர்.
ஆய்வின் முடிவில் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தொகையாக 4 பேருக்கு ரூ. 13.5 லட்சம் நிவாரணத் தொகையையும் நீதிபதி கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்துக்கான புதிய நீதிமன்ற கட்டடத்தைக் கட்டுவது, உதகையில் தொழிலாளர் நீதிமன்றம் அமைப்பது, ரூ. 30 கோடிசெலவில் கட்டப்படவுள்ள புதிய நீதிமன்ற கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்துவது, இதற்கான பணிகளை விரைந்து முடிப்பது ஆகியன குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், நீதிபதி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், வழக்குகளைத் தேங்கவிடாமல் விரைந்து முடிக்க வேண்டும். விரைவான தீர்வே மக்களின் தேவை. நீதிபதிகளும், வழக்குரைஞர்களும், நீதிமன்ற ஊழியர்களும் மக்கள் சேவைக்காகாவே உள்ளனர் என்பதால் மக்கள் சேவையைக் கருத்தில்கொண்டு சிறப்பாக செயலாற்ற வேண்டும். அத்துடன் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள மெகா லோக் அதாலத்தில் அதிகபட்சமான வழக்குகளுக்குத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்றார்.