ரேலியா அணைப் பகுதியில் குளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குன்னூர் நகராட்சிக்கு உள்பட்ட 30 வார்டுகளுக்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை விளங்கி வருகிறது. 43.6 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது 17 அடி அளவுக்குத் தண்ணீர் உள்ளது. ரேலியா அணையைச் சுற்றிலும் வனப் பகுதி உள்ளதால், சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் இப்பகுதியை அறிவிக்கப்படாத சுற்றுலாத் தலமாக மாற்றி வருகின்றனர். ஏற்கெனவே இங்கு பணியில் இருந்த நகராட்சி ஊழியர்கள் சுற்றுலாப் பயணிகளைத் தடுத்து திருப்பி அனுப்பி வந்தனர். ஆனால், தற்போது நகராட்சியில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இங்கு அவ்வப்போது ஒரு ஊழியர் மட்டுமே பணிக்கு வந்து செல்கிறார்.
இப்பகுதியில், பாதுகாப்பு வசதிகளும் இல்லாததால், தற்போது சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் இங்கு குடும்பமாக வந்து, உணவு உட்கொண்டு கழிவுகளை ஆங்காங்கே வீசிச் செல்கின்றனர். மேலும், மது அருந்துபவர்களும் அதிகமாக வருவதால் மதுபாட்டில்கள் குவிந்து வருகின்றன.
இந்த அணையின் நீர் குடிநீருக்காகப் பயன்படுத்தப்படுவதை அறிந்திருந்தும், உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் இங்கு சென்று குளிக்கின்றனர்.
இந்நிலையில், ரேலியா அணைப் பகுதியில் குளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.