குன்னூரில் தேயிலை ஏலத்தில் விற்பனை குறைந்து வருவதால் வர்த்தகர்கள், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் 15 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதுதவிர 150-க்கும் மேற்பட்ட தனியார் தேயிலைத் தொழிற்சாலைகள் உள்ளன.
இந்தத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் தூள், ஏல மையம் மற்றும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. ஜிஎஸ்டி வரி அறிவிப்புக்குப் பிறகு கடந்த சில வாரங்களாக தேயிலை ஏலம் எடுப்பதில் வர்த்தகர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. சராசரியாக 30 சதவீதம் தேயிலைத் தூள் மட்டுமே விற்பனையாகிறது. இதனால் தேயிலைத் தூளின் அனைத்து ரகங்களுக்கும் விலை குறைவு ஏற்பட்டது.
சராசரி இலை ரகம், ரூ. 50 முதல் ரூ. 55 வரையிலும், முதல் தரமான இலை ரக தேயிலை ரூ. 60 முதல் ரூ. 65 வரையிலும் விற்பனையானது. டஸ்ட் ரகத்தின் சாதாரண வகை ரூ. 55 முதல் ரூ. 60 வரையிலும், முதல் டஸ்ட் வகை தேயிலைத் தூள் ரூ. 70 முதல் ரூ. 75 வரையிலும் ஏலம் சென்றது.
ஏற்றுமதியாளர்கள் மற்றும் பாக்கெட் தேயிலை தயாரிப்பவர்கள் பங்கேற்பு குறைந்துள்ளதால் தேயிலை ஏலத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தேயிலை வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வரும் 16-ஆம் தேதி நடக்கவுள்ள விற்பனை எண் 33-க்கான ஏலத்தில் மேலும் விற்பனை குறைந்தால், தேயிலைத் தொழில் மிகப்பெரிய சரிவை சந்திக்க நேரிடும் என்று ஏலதாரர்கள் தெரிவித்துள்ளனர்.