தனியார் செட்டாப் பாக்ஸ் வாங்க வேண்டுமென பொதுமக்களை கட்டாயப்படுத்தினால் கேபிள் ஆபரேட்டர்களுக்கான உரிமம் ரத்து செய்யப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:
தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் டிஜிட்டல் மயமாக்கப்படுவதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலமாக விரைவில் செட்டாப் பாக்ஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் இலவசமாக நீலகிரி மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளதால் பொதுமக்கள் யாரும் தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை விலை கொடுத்து வாங்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், சில உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தமிழ்நாடுஅரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட் டாப் பாக்ஸ் என்றும் பொதுமக்களிடம் தவறான பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ் பொதுமக்களுக்கு முற்றிலும் இலவசமாகவே வழங்கப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.
அத்துடன், நீலகிரி மாவட்டத்தில் சில கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலமாக உரிமம் பெற்றுக் கொண்டு அரசு கேபிள் டிவி இணைப்பைத் துண்டித்தும், தனியாருக்கு சாதகமாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கட்டாயப்பபடுத்தியும், தனியார் செட்டாப் பாக்ஸ் வாங்க வற்புறுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.
அவ்வாறு யாரேனும் செயல்பட்டால் அவர்களின் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
இதுதொடர்பான புகார்களை 18004252911 மற்றும் 0423-2444400 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.