உதகையில் எம்ஜிஆர்நூற்றாண்டு விழா மாரத்தான் போட்டி

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளி, கல்லூரி  மாணவ,  மாணவியருக்கான மாரத்தான் ஓட்டப் பந்தயம் உதகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.  

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளி, கல்லூரி  மாணவ,  மாணவியருக்கான மாரத்தான் ஓட்டப் பந்தயம் உதகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.  
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்ட திறந்தவெளி அரங்கிலிருந்து  நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டப் பந்தயத்தை,  மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தலா 8 கி.மீ தொலைவுக்கும், மாணவியருக்கு தலா 6 கி.மீ தொலைவுக்கும் இப்போட்டிகள் நடத்தப்பட்டன.  கல்லூரி மாணவர் பிரிவில் உதகை அரசு கலைக் கல்லூரி மாணவர் நிகில்குமார் முதலிடத்தையும்,  பெங்கால்மட்டம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் இரண்டாமிடத்தையும்,  உதகை  அரசு கலைக்கல்லூரி மாணவர் ஷேக் அமீன் மூன்றாமிடத்தையும் பெற்றனர். பள்ளி மாணவர்களுக்கான பிரிவில்,  குன்னூர் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அரவிந்த்  முதலிடத்தையும், ஷிருதன் இரண்டாமிடத்தையும்,  உதகை புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர் வினீத் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
கல்லூரி மாணவியருக்கான பிரிவில், குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ஹெலன்  டீனா,  யோகலட்சுமி  மற்றும் ஆயிஷா பெனசிர் ஆகியோர் மூதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.  பள்ளி  மாணவியருக்கான பிரிவில்,  அருவங்காடு புனித ஆன்ஸ் பள்ளியைச் சேர்ந்த தனிஷா முதலிடத்தையும்,  சாம்ராஜ் மேல்நிலைப் பள்ளியின்  வைஷ்ணவி  இரண்டாமிடத்தையும்,  அருவங்காடு புனித ஆன்ஸ் மேல்நிலைப் பள்ளி  மாணவி  சொர்ணலட்சுமி மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
நான்கு பிரிவுகளிலும் தலா 15 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒவ்வொரு பிரிவிலும் 12 பேருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலர் பிச்சையப்பன், மாவட்ட விளையாட்டு அலுவலர் உ.தி.குமார் உள்பட  பல்வேறு  அரசுத் துறைகளின் அலுவலர்கள் பங்கேற்றனர்.
காட்டுத்தேனீ கொட்டி ஆசிரியை உள்ளிட்ட 5 பேர் காயம்:  மாரத்தான் போட்டி நடைபெற்ற மைதானத்துக்கு வெளியே இருந்த  மரத்தில் காட்டுத் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன.  மாரத்தான் போட்டிகளுக்காக வந்த யாரோ சிலர் தேன் கூட்டின் மீது கல்லெறிந்ததில் தேன் கூடு கலைந்து மாரத்தான் போட்டிகளுக்காக வந்திருந்தவர்கள் மீது தேனீக்கள் கொட்டின.
  இதில் பள்ளி ஆசிரியை மற்றும் 4 மாணவிகள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் மாரத்தான் போட்டி நடக்கும் இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com