உதகையில் தடுப்புச் சுவரின் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயமடைந்தார். பேருந்தில் பயணித்த 64 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருப்பூரிலிருந்து கூடலூருக்கு உதகை வழியாக அரசுப் பேருந்து வியாழக்கிழமை காலை வந்து கொண்டிருந்தது. இப்பேருந்தை மூர்த்தி என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
உதகையை அடுத்த வேலிவியூ பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே பாரம் ஏற்றிய லாரி உதகையிலிருந்து வேகமாக வந்து கொண்டிருந்ததாம்.
அதன்மீது மோதாமலிருக்க ஓட்டுநர் பேருந்தை இடதுபுறமாக திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து அருகிலிருந்த தடுப்புச் சுவரில் மோதியுள்ளது.
ஆனால், அதிர்ஷ்டவசமாக தடுப்புச் சுவரையொட்டிய பள்ளத்தாக்கு பகுதிக்கு மேற்புறத்தில் பாறைகளும், மரங்களும் இருந்ததால் இவற்றின் மீது மோதி பேருந்து நின்றுள்ளது. இதில் பேருந்தின் முன்புறம் முழுதும் சேதமடைந்தது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். பேருந்து ஓட்டுநர் மூர்த்தி மட்டும் படுகாயமடைந்து உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்தின் காரணமாக உதகை-குன்னூர் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பின்னர் 2 பொக்லைன் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு பேருந்து மீட்கப்பட்ட பின்னரே போக்குவரத்து சீரடைந்தது. இதுகுறித்து உதகை நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.