உதகைக்கு வரி கட்டாமல் வந்த கேரவன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
உதகையில் புதுவை மாநில பதிவெண் கொண்ட ஒரு கேரவன் வாகனம் வரி கட்டாமல் இயக்கப்படுவதாக வட்டாரப் போக்குவரத்து துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர் லட்சுமிபதிராஜூ தலைமையிலான குழுவினர் வெள்ளிக்கிழமை அந்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு சென்று அதை கைப்பற்றினர். அப்போது அந்த கேரவன் வாகனம் ஒரு இந்தி திரைப்படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்புக்காக உதகைக்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், சொந்த உபயோகத்திற்கென பதிவு செய்யப்பட்டிருந்த அந்த வாகனம் திரைப்பட வெளிப்புறப் படப்பிடிப்புக்காக வாடகைக்கு விடப்பட்டதான குற்றச்சாட்டின் பேரில் அதற்கு வரியாக ரூ. 1 லட்சத்து 27,400, அபராதமாக ரூ. 4,000 என மொத்தம் ரூ. 1 லட்சத்து 31,400 அபராதமாக விதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து படப்பிடிப்புக் குழுவினர் தலைக்குந்தா சோதனைச் சாவடிக்கு சென்று அங்கு அந்த அபராதத் தொகையை கட்டிய பின்னர் அதற்கான அத்தாட்சியை வட்டார போக்குவரத்து அலுவலரிடம் காட்டிய பின்னரே அந்த கேரவன் வாகனம் விடுவிக்கப்பட்டது.
இந்த கேரவன் வாகனம் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பொள்ளாச்சியில் நடிகை அனுஷ்கா பயன்படுத்தியபோது வரி கட்டாததற்காக பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது.