கூடலூரை அடுத்துள்ள பிதர்க்காடு பகுதியில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி சித்த வைத்தியரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
பந்தலூர் தாலுகா, நெலாக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட பிதர்க்காடு பகுதியில் முறையாக சித்த மருத்துவம் படிக்காமல் ஒருவர் சிகிச்சையளித்து வருவதாக அப்பகுதி மக்கள் தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில் சுகாதாரத் துறை துணை இயக்குநர் ரகுபாபு, ஆய்வாளர் அமீர், கண்காணிப்பாளர் ரவிக்குமார், சித்த மருத்துவர் விஜயகுமார் ஆகியோர் பிதர்க்காடு பஜாரிலுள்ள சம்பந்தப்பட்ட சித்த மருத்துவமனையை ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு இருந்த கேரள மாநிலம், மீனங்காடி பகுதியைச் சேர்ந்த பூபேஷ் (45) என்பவரை விசாரித்தனர். விசாரணையில் அவரிடம் சித்த மருத்துவம் படித்ததற்கான சான்றிதழ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, சுகாதாரத் துறை துணை இயக்குநர் ரகுபாபு கொடுத்த புகாரின் அடிப்படையில், அம்பலமூலா காவல் ஆய்வாளர் லோகநாதன் தலைமையில் போலீஸார், பூபேஷை கைது செய்தனர்.