சத்தியமங்கலம் வனத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வனக் குட்டைகளில் தண்ணீர் நிரம்பி வழிகின்றன.
சத்தியமங்கலம், தாளவாடி வனப் பகுதியில் உள்ள தொட்டஹாசனூர், திகினாரை, பனஹள்ளி, பாளையம், சிக்கள்ளி, கொங்கள்ளி, அருள்வாடி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து, பல்வேறு அருவிகளில் இருந்து வரும் தண்ணீர் அங்குள்ள பள்ளத்தில் கலப்பதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. புதுவெள்ளத்தால் அருவிகளில் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
வனத்தையொட்டி உள்ள பெரும்பாலான கசிவுநீர்க் குட்டைகளில் நீர் நிரம்பி வழிகின்றன. தாளவாடி - தலமலை வனச் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
பல்வேறு ஓடைகளில் இருந்து வரும் வெள்ளநீர் பனஹள்ளி குட்டையில் சேர்வதால் குட்டையில் வெள்ளநீர் நிரம்பி வழிகிறது. பலத்த மழையால் மலைவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வனக் குட்டைகளில் நீர் நிரம்பி வருவதால் வன விலங்குகள் அங்குள்ள வனக் குட்டைகளில் நீர் அருந்தி வருகின்றன. இதனால், வன விலங்குகள் குடிநீர்த் தேடி கிராமத்துக்குள் புகுந்துவிடும் பிரச்னைகள் குறைந்து வருகின்றன.
மேலும், விவசாய நிலங்களில் நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்துள்ளது.