குன்னூர் அருகே பாதுகாப்பற்றுக் காணப்படும் கேத்தரின் நீர்வீழ்ச்சியில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தகிரி, அரவேணு பகுதியில் உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியில் பொதுவாக குளிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லை. அருவி தொடங்கும் இடத்தில் மலை மீதுள்ள சிறிய குட்டைகளில் மட்டுமே சிலர் குளிக்கச் செல்வர். அதிலும் சில இடங்களில் வழுக்கிவிடும் பாறைகள் உள்ளதால் அடிக்கடி விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
பல நேரங்களில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தடுப்புகள் உடைந்துள்ளதால் அதனைத் தாண்டி, பாறைகள் மீது நின்று புகைப்படம் எடுத்து வருகின்றனர். செப்டம்பரில் இரண்டாம் சீசன் தொடங்கவுள்ளதால் இப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும்.
எனவே, உயிரிழப்புகளைத் தவிர்க்கும் வகையில் சுற்றுலாத் துறை, கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம், காவல் துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் இப்பகுதியில் எச்சரிக்கைப் பலகைகளை வைப்பதோடு, அவ்வப்போது இப்பகுதியில் ரோந்துப் பணியிலும் ஈடுபட வேண்டும் என்று இப்பகுதி மக்கள், சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.