ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 85 சதவீத ஊழியர்கள் பங்கேற்றதால் அரசுப் பணிகள் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டன.
8-ஆவது ஊதியக் குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம்
முழுவதும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரிலும், கூடலூர், பந்தலூர், கோத்தகிரி, குன்னூரில் வட்டாட்சியர் அலுவலகங்கள் எதிரிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. உதகையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ நிர்வாகி ஆனந்தன், அண்ணாதுரை ஆகியோர் தலைமை வகித்தனர். குமாரராஜ், சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆஸீரா தொடக்கி வைத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கருவூலத் துறையைத் தவிர ஏனைய அனைத்து துறையினர் சுமார் 2,500 பேர் பங்கேற்றதாகவும், 85 சதவீத அரசு ஊழியர்கள் பணிக்குச் செல்லவில்லை என ஒருங்கிணைப்பாளர் ஆஸீரா தெரிவித்தார். போராட்டத்தின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் அவை பூட்டப்பட்டிருந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.