நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2017-ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு ஆகஸ்ட் 28 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் த.செல்வராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாவட்ட அளவிலான 3-ஆம் கட்டக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளத்தில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, 14 வயது பூர்த்தி அடைந்த இருபாலரும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.
பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு பொருத்துநர், கடைசலர், கம்பியர் உள்ளிட்ட தொழிற் பிரிவுகளில் உள்ள பல்வேறு புடிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதேபோல, எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு அதற்கேற்ற படிப்புகள் உள்ளதால் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி அன்று குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு 0423-2231759 மற்றும் 0423-2233010 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.