சேலத்திலிருந்து கூடலூர் செல்லும் அரசுப் பேருந்தில் வெடிபொருள் கடத்தியதாக, உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்தவர் சீனிவாசன். பந்தலூர், மேங்கோரேஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர்கள் இருவரும் சேலத்திலிருந்து கூடலூர் செல்லும் அரசுப் பேருந்தில் வெள்ளிக்கிழமை காலை உதகைக்கு வந்துள்ளனர். உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இப்பேருந்தை அரசு போக்குவரத்துக் கழகப் பரிசோதகர் சுப்பிரமணி சோதித்தபோது அவர்களிடமிருந்த ஒரு பையில் பட்டாசு போன்ற வெடிபொருள் இருப்பது தெரியவந்துள்ளது.
உடனடியாக, அவர்கள் இருவரையும் பேருந்திலிருந்து கீழே இறக்கி சோதனை செய்ததில் அது சாதாரண பட்டாசைவிட சக்தி வாய்ந்த வெடிபொருள் என்பதும், குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக அதைக் கொண்டு செல்வதும் தெரியவந்தது.
அரசுப் பேருந்துகளில் பட்டாசு உள்ளிட்ட எந்தவிதமான வெடிபொருள்களையும் கொண்டு செல்வது சட்ட விரோதம் என்பதால், அதை அனுமதிக்க முடியாது எனக் கூறிய சுப்பிரமணி, அதுகுறித்து உதகை நகர மேற்கு காவல் நிலையத்துக்குப் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் சீனிவாசன், உதயகுமார் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.