மருந்தாளுநர்கள் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் என ஜெர்மன் நாட்டின் மருந்தாக்கியல் நிபுணர் நிர்மல் ராபின்சன் வலியுறுத்தினார்.
உதகையிலுள்ள ஜேஎஸ்எஸ் பார்மசி கல்லூரியில் 56ஆவது தேசிய பார்மசி வார விழா கொண்டாட்டங்கள் புதன்கிழமை தொடங்கின. இதில், முதன்மை அழைப்பாளராக பங்கேற்ற ஜெர்மன் நாட்டின் மருந்தாக்கியல் நிபுணரான டாக்டர் நிர்மல் ராபின்சன் பேசியதாவது:
மருந்தாக்கியல் துறையில் நாள்தோறும் பல்வேறு புதிய மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான மருந்துகளுக்கு உரிய ஆதாரங்கள் இல்லாத நிலையே காணப்படுகிறது. எனவே, இப் பிரச்னையில் மருந்தாளுநர்கள்தான் விழிப்புணர்வோடுச் செயல்பட்டு சரியான மருந்துகளை வழங்க வேண்டும். சர்வதேச அளவில் வளர்ந்து வரும் மருந்தாளுநர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால், எதிர்கால மருந்தாக்கியல் துறையின் முன்னேற்றம் குறித்து இப்போதே அவர்களுக்கு தெளிவுப்படுத்துவதோடு, அதற்கேற்ப அவர்களை தயார்படுத்தவும் வேண்டும். மருந்துகளின் பயன்பாட்டைக் குறித்து சாமானிய மக்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதால் மருந்தாளுநர்கள்தான் அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பங்கேற்று குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ரகு பாபு, உதகை அரசு தலைமை மருத்துமனை கண்காணிப்பாளர் டாக்டர் இரியன் ரவிக்குமார், புதுவை மருந்தாக்கியல் நிபுணர் அன்பரசன், மைசூரு ஜேஎஸ்எஸ் பார்மசி கல்லூரியின் முதல்வர் டாக்டர் பிரமோத் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக கல்லூரியின் முதல்வர் டாக்டர் தனபால் வரவேற்றார். முடிவில் துணை முதல்வர் அப்சல் ஆஸம் நன்றி கூறினார்.