கொடி நாளையொட்டி உதகையில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் 17 பேருக்கு ரூ.2.6 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
உதகையிலுள்ள பழங்குடியினர் மேம்பாட்டு மையத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியர் பேசியதாவது:
கொடி நாள் வசூலுக்காக 2016-ஆம் ஆண்டுக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ரூ.39 லட்சத்து 20 ஆயிரமாக இருந்தாலும், ரூ.57 லட்சத்து 84 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 2,251 முன்னாள் படைவீரர்களும், 839 முன்னாள் படைவீரர்களின் கைம்பெண்களும் இதுவரை தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். அத்துடன் பல்வேறு திட்டங்களின் மூலம் 105 பேருக்கு ரூ.29.17 லட்சம் நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, தங்களது ஒரே மகன் அல்லது மகளை படைப் பணிக்கு அனுப்பிய பெற்றோருக்கு ஒரே தவணையில் ரூ.,20 ஆயிரம் மற்றும் ரூ.25ஆயிரம் வழங்குவதாகவும் அரசு அறிவித்துள்ளது. சுயதொழிலில் ஈடுபடும் முன்னாள் படைவீரர்களை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் படைவீரரின் குழந்தைகளுக்கு உயர் கல்வியில் இட ஒதுக்கீட்டு முறையின் மூலம் 42 மாணவ, மாணவியர் பயனடைந்து வருகின்றனர். முன்னாள் படைவீரர் நல அலுவலகத்துக்கு மையக் கட்டடம் கட்டுவதற்காக ரூ.2.19 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து முன்னாள் படைவீரர்களுக்கான கொடி நாள் வசூலையும், இலவச கண் சிகிச்சை முகாமையும் அவர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், கமாண்டிங் அதிகாரி கர்னல் பி.எஸ்.பார்வதி, கர்னல் பெட்கர், பிரிகேடியர் பங்கஜ் பி.ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் கண்ணகி, நல அமைப்பாளர் மல்லிகார்ஜுனன் ஆகியோருடன் தேசிய மாணவர் படை, தேசிய பாதுகாப்புப் படை மாணவ, மாணவியர் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.